பயங்கரவாதம்

on Sunday, November 2, 2008

தொன்மையான இவ்வுலகினிலே பல
மென்மை சேர்த்திட மாட்டாமல் கருந்
தன்மை உடைய கனலாக உயர்
வன்மை செய்திடல் சரிதானோ !

காட்டுத்தீ போல் பரவிவரும் கொடும்
வேட்டை களங்கள் புகுத்தி வரும்
நாட்டை பொசுக்கும் நாசினியை இனி
வெட்டி எரியும் நாளேதோ !

ஏற்றம் உழுது வாழ்ந்து வந்தோம் உயர்
காற்றை மிதமாய் தாங்கி வந்தோம் பல
பயிர்கள் வளர்ந்த பூமியின் மேலே
உயிர்கள் பறிக்க கிளம்பிவிட்டோம் !

தேவை இதுவல்ல அறிவீரோ உயிர்
சேவை பெரிதென உணர்வீரோ இனி
ஆயுதம் ஏந்திய கையை உதரி
தோழமை சேர்த்திட மாட்டீரோ !

----- தீன தயாளன்

தீ

on Saturday, November 1, 2008

அரனும் நானும் ஒன்றே காண்க
அடைந்தவை கைபிடி மண்ணே காண்க
ஆதவன் உடுத்திய ஆடை காண்க
ஆணவம் தனக்கு உவமை காண்க

பாலினும் தூய்மை என்னில் காண்க
பாதை தெரிய ஒளியைக் காண்க
சீதை கற்பின் ஆயுதம் காண்க
சீற்றம் கொண்டால் அழிவைக் காண்க

உடம்பை இயக்கும் உயிரைக் காண்க
அதனைப் பொசுக்கும் எரியைக் காண்க
பூதம் ஐந்தில் ஒன்றைக் காண்க
புவியின் நடுவில் கொதிப்பவைக் காண்க

நீரைக் கொல்லும் என்னைக் காண்க
என்னைக் கொல்லும் நீரைக் காண்க
அடக்கி வைத்தால் உயர்வைக் காண்க
அழிக்க எடுத்தால் வீழ்ச்சி காண்க

----- தீன தயாளன்

செம்மொழி

உச்சரிப்போர் நாவினிலே கச்சேரி நடனமிடும்
உச்சிப்புகழ் பெற்றுவிட்ட தீம்மொழியே - நிந்தன்
கட்சிப்புகழ் ஓங்கிவிட்ட சாட்சிசொல்லி பாட்டெழுத
இலட்சியத்தை பெற்றேனடி செம்மொழியே

பட்டினத்தார் பாட்டினிலும் கட்டிவைத்த ஏட்டினிலும்
கொட்டி முழக்கமிடும் பைம்மொழியே - உன்னை
கட்டிவைத்து பெட்டிதனிலே பூட்டிவைக்க எண்ணினோர்கை
வெட்டி எரிந்தாரடி தமிழ்மொழியே

கவிநூறு கோலங்கள் புவிதோறும் அறிஞர்கள்
பவித்திர சிறப்படைந்த எம்மொழியே - எந்தன்
செவிப்பாய்ச்சும் தேனமுதம் சுவைக்கண்டு மெய்மறந்து
துயில்நீங்கி கற்றேனடி கனிமொழியே

ஆயிரம் அறிஞர்கள் அரசர்கள் அரசவையில்
பாயிரம் பாடினர் பழந்தமிழே - பகலோன்
வாழும்வரை வாழ்ந்திடுவாய் வான்புகழும் வளமையினை
தாழாது தரித்திடும் தமிழமுதே

பண்டுமொழி பலவற்றைக் கண்ட திருநாட்டினிலே
கொண்டபெயர் மங்காத திருமொழியே - மலரின்
செண்டுமீது வட்டமிடும் வண்டுகளின் கூட்டமென
உண்டுபல ஆர்வலர்கள் தேன்மொழியே

புத்தகங்கள் அடுக்கிவைத்து யுத்தங்கள் நிறுத்திவைத்து
நித்தம் நின்னை ஓதுகின்ற வரம்பெறினே - உலகம்
கத்தியின்றி இரத்தமின்றி சத்தியத்தின் மார்கத்திலே
தத்தித்தி தவழுமடி என்னுயிரே

கனிமூன்று சுவைதனினும் நனிஇன்பம் நல்குகின்ற
பனிக்குன்று வரைநீளும் அருமொழியே - எந்தன்
உமிழ்வற்ற பாடிடுவேன் அமிழ்தினும் இனிமைமிகு
தமிழ்மொழி உனக்குஎன் வந்தனமே

----- தீன தயாளன்